Monday, April 4, 2011

மாற்றமடைந்த இராமாயணம்

வால்மீகி ராமாயணத்தின் கதை பல கவிகளின் கைகளிலே போய் சில சம்பவங்கள் வேறாகி அங்கு மாற்றமும் வந்துவிடுகிறது .கம்பரின் இராமாயணத்திலும் ஸ்ரீதுளசிதாசரின் "ஸ்ரீராம்சந்த்ரமானஸ்"லும் சில இடங்கள் மாறிவருகின்றன .
கவிநயத்திற்காகவும் ஒருவரின் சரித்திரத்தை மேல்படுத்திக்காட்டவும் இதுபோல்
எழுதியிருக்கலாம் ஆனால் சமீபத்தில் நான் கேள்விப்பட்ட இராமயணக்கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது பல மாற்றங்களுடன் எழுதியிருக்கும் அந்த இராமாயணத்தைப் பார்க்கப்பார்க்க வியப்பாக இருந்தது

இதைப்போல் இராமயணத்தை மாறுபட்டு எழுதியவர் "பம்பாகவி " இவர் இதை எழுதிய போது முப்பத்தொன்பது வயதுதான் 942ம் வருடம் இந்தக்காவ்யத்தை எழுதினார் .
இவர் ராஷ்டரகுடா மன்னர் " அரிகேசரின் " அரண்மணையில் அரசகவியாக இருந்தவர்.
இவரது பெற்றோர்கள் முதலில் பிராம்மணப்பிரிவில் இருந்து பின் ஜைனமதத்தைத்தழுவினவர்கள்.

இவர்கள்து மகனும் ஜைனமதத்தைத்தழுவி
தன் வாழ்நாள் கடைசி வரையிலும்
தொண்டு செய்துவந்தார் ,பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் ,பெரிய கவிஞர் , மகாஞானி
அவரது புத்தகம் " ரிஷபா " 24.தீர்த்தங்கரர்களைப்பற்றிக்கூறுவது.
இவர் வாழ்ந்த சமயத்தில் ரன்னா ,பொன்னா என்ற மிகச்சிறந்த கவிஞர் இருவர்கள் பல கன்னட புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர்.ஆகையால் இவர்களுடன் பம்பா அவர்களையும் சேர்த்து
"ரத்னத்ரயா "என்று பாசமாக மக்கள் அழைத்தனர்,

இவர் ஆதிபுராணா என்று மஹாபாரதத்தையும் இராமாயணத்தையும் எழுதியிருக்கிறார்
'பம்பாபாரதா' என்பது மஹாபாரதத்தின் சுருக்கும் என சொல்லலாம்
சில இடங்களில் அவரது மன்னர் அரிகேசரினை வில்வீரன் அர்சுனனுக்கு
ஒப்பிட்டுள்ளார் ,நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இவருக்கு அதிக அளவில்
இருந்ததால் பல சிறந்த படைப்புகளைத் த்ந்துள்ளார்

இனி அவர் எழுதிய இராமாயணதிற்கு வருவோம்

இந்த ராமாயணத்தின் பெயர் "ஸ்ரீராமசந்த்ரசரித புராணா'

இந்த இராமயணைத்தில் தசரதருக்கு நாலு மனைவிகள்

அபராஜிதா என்ற மனைவிக்குப்பிறந்த மகன் பெயர் பத்மா பின்னார் ராமரானவர்.
சுபத்ரா என்ற மனைவிகுப்பிறந்தவர் நாராயணா ,இவர்தான் இலட்சுமணர்
கைகேயிக்கு பரதர் சுப்பிரபா என்ற மனைவிக்குப்பிறந்தவர் சத்ருக்னர்

இதே போல் ஸ்ரீராமருக்கும் நான்கு மனைவியைச்சித்தரிக்கிறார் இந்தக்கவி.
அவர்கள் ....மைதலி ,பிரபாவதி , ரத்னிபா , ஸ்ரீதமா

இவர் இராமயணத்தில் ஸ்ரீராமர் இராவணனைக்கொல்லவில்லை ஆனால் இலட்சுமணனே இராவணைக்கொல்கிறார் .ராமர் யுத்தம் முடிந்தப்பின் ராஜ்யத்தைச்சகோதருக்குத்தந்துவிட்டு ஜைன சன்யாசியாக மாறிவிடுகிறார்
பின் அவர் ஸ்வர்க்கமும் போகிறார் .
ஆனால் இராவணனைக்கொன்ன பாவத்தினால் இலட்சுமணன் நரகம் போகிறான்,
அவனுடன் இராவணனும் நரகம் போகிறான் இருவரும் மறுபிறப்பில் நற்காரியங்களைச்செய்து முக்தி அல்லது மோக்ஷம் அடைவார்கள் என்று ராமர் கூறுகிறார் .இராவணன் வருங்கால தீர்த்தங்கரர் ஆவார் என்றும் கூறுகிறார் ,

சீதையின் கதையிலும் சீதை யுத்தம் முடிந்தப்பின் ஜைன சன்யாசினியாக ஆகிவிடுவதால் ராமர் அவளை விட்டு விட்டு சுவர்க்கம் போகிறார்

தசரதர் செய்த புத்ரகாமேஷ்டி யாகம் இங்கு வருவதில்லை இங்கு விசுவாமித்ரரும்
வருவதில்லை ஆனால் நாரதர் வருகிறார் சீதையைக்கண்டு ஆசைக்கொள்கிறார்,
ஆனால் சீதை இவரை விரும்பாததால் பல கஷ்டங்கள் ஒடுக்கிறார்

சுயம்வர மேடையில் ராமர் உடைப்பது ஜனகருடைய வில் .
ஜனகரிடம் இரண்டுவில்கள் இருந்தன .ஒன்று வஜ்ராவர்த்தம் மற்றொன்று
ஸாராவர்த்தம் ..அதில் ஒன்றை உடைத்து சீதையை மணந்துக்கொள்கிறாள்,
இலட்சுமணனும் மற்றொன்றை உடைத்து சந்திரதுவஜன் என்பவரின் இரு
மகள்களை மணந்துக்கொள்கிறான் ,

வால்மீகி இராமயணத்தில் பரதனை மிக உயர்வாகச்சித்திரிக்கப்பட்டிருக்கிறது
ஆனால் இவரோ பரதனைப் பொறாமையால் வேகும் சகோதரானாகச் சித்தரிக்கிறார்

இங்கு வரும் கைகேயியோ ராமரைக்காட்டுக்குப்போகச் சொல்லவில்லை
ஆனால் பரதனுக்குப்பட்டம் மட்டும் கேட்கிறாள்.

கானகத்தில் மாரீசன் வருவது இந்த இராமயணத்தில் இல்லை ஆனால் ஜடாயு சீதையைக்காவல் காத்து நின்றாராம்

எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீராமர் ஏகபத்னி
விரதம் கொண்டதாக இல்லாமல் சுக்ரீவனுடைய
மகளை மணந்ததாகச்சொல்கிறார் இவர்

பிரம்மசாரியான ஸ்ரீராமபக்தரான அனுமார் இங்கு
அனங்கபுஷ்பை என்றவளை மணம் செய்துக்கொண்டிருக்கிறார் .இவள் இராவணனின்
தங்கை சந்திரநகியின் மகள். அதாவது சூர்ப்பனகையின் மகள்,இந்தக்கல்யாண
வைபவத்தில் சீதனமாக இராவணன் அனுமனுக்கு கர்ணகுண்டல்புரம் என்ற இடத்தை
அளித்தானாம் .மாருதி இந்த இடத்திற்கு அரசன் ,
ஆனால் இராவணன் சீதையை அபகரித்து வர
இந்த அதர்மச்செயலால அனுமன் இராவணனுக்கு எதிரியாகி ராமனுக்கு உதவி புரிய அவருடன் சேர்ந்துக்கொள்கிறார்
ஜைனமதத்தில் இருந்த பம்பா ஹோமத்தையும்
யாகத்தையும் தவிர்த்திருக்கிறார் இதனால் அசுவமேத யாகம் இதில் வரவில்லை என நினைக்கிறேன் இந்தப்புத்தகம் வாங்கிப்படிக்க நினைக்கிறேன் ஆனால் கன்னடத்தில் இது இருக்கிறதே!

இதைப்பற்றி எனக்குச்சொன்னவர் ஒரு கன்னட
நண்பர் ,ரயில் பிரயாணத்தில் சந்தித்தவர் ரயில் பிரயாணம் போது இராமயணத்தைபற்றி நாங்கள் பேசஅவர் இந்த மாறுபட்ட
இராமயணத்தைச்சொன்னார் ,மிகவும் வித்தியாசமாக இருந்தது



.

No comments: