Tuesday, July 1, 2008

ஏன் இந்தத் திடீர் மாற்றம்?

மகனே உன்னிடம்
ஏன் இந்த திடீர் மாற்றம் ?
அந்த நாள் வந்தது ஞாபகம் ,
உன் உடலிலே எண்ணெய்த் தடவ ,
குட்டிச் சட்டியுடன் நிற்பாயே!
மிதமான சூடுடன் விளாவி ,
ஆசையுடன் முதுகைத் தேய்க்க
சுகமாகக் காட்டுவாயே!
இப்போது ஏன் இந்த மாற்றம்
என்னை விலகி ஓடுகிறாய் ?

உன் தலைமுடியைக் கோதி ,
இரு கன்னத்தை அசங்காமல் பிடித்து ,
உன் சுருட்டைமுடியை நீவ
சமத்தாகக் காட்டுவாயே .
இன்று உன்னைப் பார்க்கிறேன்
பல நாட்கள் வாராத முடி
குருவியின் கூடு கவிழ்த்தாற்போல்
அடிக்கடி முடியால் ஒரு கண் மறைய
கைகளால் பலதடவைகள் கோத
கழுத்துவரை முடி பரவ
கண்ணா ஏன் இந்த மாற்றம் ?
என்னை விலகி ஓடுகிறாய்?

மொறு மொறுவென்று
உருளைக்கிழங்கு வதக்கி .
சுடச்சுட குழம்பு சாதம்
உன் தட்டில் வைக்க
நீ உண்ணும் அழகை நான் ரசிக்க
அப்படியே உன்னை அணைத்து
உச்சி முகர்ந்தேனே .
அந்த நாட்கள் இனி வருமா ?
இன்றும் உன்னை
அணைக்கத் துடிக்கின்றேன்.
ஏன் இந்தத் திடீர் மாற்றம் ?
ஏன் விலகிப் போகிறய் ?

பள்ளியிலிருந்து ஓடி வருவாய் ,
பல கதைகள் பேசுவாய் ,
என் மடியில் தலை வைத்து
களைப்பில் தூங்கி விடுவாய் ,
கால் வலித்தாலும்
உன் தூக்கம் கலையாமல் இருக்க
அசையாமல் அமர்ந்திருப்பேனே .
ஆனால் இன்றோ
காலேஜிலிருந்து வருகிறாய்
சன்னலில் தவம் செய்கிறாய்.
நண்பர்கள் இடையில் மறைகிறாய் ,
வண்ணச் சிட்டுக்கள் உன்னைச் சூழ
முகம் மலர ரசிக்கிறாய் .
ஏன் இந்தத் திடீர் மாற்றம்
என்னைவிட்டு விலகுகிறாய் ?

குழந்தைப் பருவம் முடிந்துப் போக
விடலைப் பருவம் தலைத்தூக்க
அதைப் புரிந்துக் கொள்ளாத நான்
உன்னைக் குழந்தையாகவே பார்க்கிறேன் ,
ஒரு வயதில் தந்தை இழந்தாய் .
நானே தந்தை ,நானே தாய் ,,,,,,
உனக்கென்று தனி வழி தேடி விட்டாய் ,
என்க்கென்ற ஒரு வழியைத் தேடவேண்டும் .
தாய்க்குப் பின் தாரமும் வருவாள்,,,,

எதிர்ப்பார்ப்பு இல்லாத வாழ்க்கை
நான் இனி தேட வேண்டும்
தன் காலால் நான் நிற்க
இன்மேல் பயில வேண்டும்
அன்பு என்ற உலகில்
வலம் வரவேண்டும்
மகனே நீ விலகினாலும்
நான் தெளிவாகி விட்டேன்

No comments: