Thursday, September 29, 2011

கலைமகளை வரவேற்கும் முருகன்

புரட்டாசி மாதம் .மகம் நட்சத்திரம் .முருகப்பெருமான் ஆசையாக
குமாரக்கோயிலிலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை வந்து கலைமகளின்
வருகைக்காகக் காத்து நிற்கிறார் .ஆம் ! சரஸ்வதி தேவி
திருவனந்தப்புரத்தில் நவராத்திரிவிழாவை ஆரம்பிக்க வரப்போகிறாள்.
இந்த சரஸ்வதி கவியரசர் கம்பர் பூசித்த விக்ரஹம். சோழநாட்டிலிருந்து
சேரநாட்டிற்கு வந்தப்பின்னர் அங்கிருந்த மன்னருக்குப்பரிசாகக் கொடுத்த
சரஸ்வதி விக்ரஹம் .. அந்தக்கலைமகள் இன்று யானைமேல் பவனி வருகிறாள் .
எங்கிருந்து வருகிறாள் தெரியுமா? முக்கடல் சேரும் இடமான,தமிழகத்தின்
எல்லையான கன்யாகுமரியிலிருந்து வருகிறாள். .அவளுக்குத் துணையாக
சுசீந்திரம் கோயிலிலிருந்து முன்னூற்று மங்கையும் சேர்ந்து வருவாள்,
முன்னே உதித்த மங்கை முன்னூற்று மங்கையாக ஆகி இருக்க வேண்டும் .

இதோ வந்துவிட்டாள் கலைமகள்.
பதமநாபபுரம் அரண்மனையில் தேர் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு
மிகப்பிரமாதமான ஊர்வலம் துவங்குகிறது .பத்மநாபதாசர்கள்
என்று சொல்லிக்கொள்ளும் திருவாங்கூர் ராஜபரம்பரையினரில் ஒருவர் வாள்
ஏந்தி முன்னால் செல்கிறார்,நீண்ட பாத யாத்திரை துடங்குகிறது ,சுமார்
மூன்று நாட்கள் , பிரயாணம் . வழியெல்லாம் முருகனையும் கலைமகளையும்
பார்க்க
ஏகப்பட்ட கூட்டம்
கூட வரும் கந்தன் கரமனை என்ற இடத்தில் தன் ஊர்வலத்துடன் நிற்கிறான் ,
அங்கு ஒரு வெள்ளிக்குதிரை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு அதில்
அழகன் குமரன் அமர்கிறான் .கூடவே யானைகளின் அணி அழகாக நடக்க
ஆரம்பிக்கிறது ஒவ்வொரு யானைக்கும் நெற்றிப்பட்டம் பளபளக்க கூடவே மங்கல
ஒலி நாதஸ்வரத்தில் கிளம்ப ஊர்வலம் ஆர்யசாலைக்கு வருகிறது அங்கு முருகன்
தேவிகோயிலில் சென்று அமர்ந்து அருள் புரிகிறான் .
சரஸ்வதி தேவி யானையின் மேல் அமர்ந்தபடி
சரஸ்வதி மண்டபத்தில் வந்து நவராத்திரி முடியும் வரை அங்கு எழுந்தருளுகிறாள்.

பின் விழா தொடங்குகிறது .விழாவில் இசை
மேதைகள் பங்கு பெற்று ஸ்ரீ சுவாதி திருநாள் இயற்றிய பல
கீர்த்தனைகளைப்பாடுகின்றனர்..
ஸ்ரீ சுவாதிதிருநாள் என்ற மன்னர் ஸ்ரீபத்மநாபசுவாமியின் மேல் நூற்றுக்கணக்கான
பாடல்கள் எழுதியிருக்கிறார் ,
நவராத்திரி தேவிக்காக அம்பாளின் மேல் பல பாடல்களியற்றி
நெஞ்சுருகிப்பாடியிருக்கிறார்,
அவரது ஞாபகமாக பல கர்நாடக இசை வல்லுனர்கள் இந்த விழாவில் பங்கேற்று
விழாவை மேலும் சிறக்கச்செய்கிறார்கள்,
இன்றும் மன்னர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்
இதில் பங்கு பெறுகின்றனர் ,
அம்பாளே ஆரம்பித்து வைக்கும் இந்த நவராத்திரியின் சிறப்புக்கு எல்லை ஏது?